சென்னை, :தமிழ்நாடு நாள் விழாவையொட்டி கடந்த 2019ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.தமிழ் வளர்ச்சிக்காக தனி ஆளாகத் தொண்டு செய்தும் தமிழ் அமைப்பு வைத்துத் தமிழ் மொழிக்காக பாடுபடும் ஆர்வலர்களை மாவட்டந்தோறும் கண்டறிந்து, அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், தமிழ்ச் செம்மல் விருது ஆண்டுதோறும், ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றவாறு வழங்கப்படுகிறது. இந்த விருது பெறுபவருக்கு ரூபாய் 25 ஆயிரம் விருதுத் தொகையும் வழங்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு முதல் தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
தமிழ்ச் செம்மல் விருதுகளுக்கு தெரிவு செய்யப்பட்ட இதர விருதாளர்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் மூலம் தமிழ்ச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்.
இதன்படி கடந்த 2019ம் ஆண்டுக்கான செம்மல் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், க.பாண்டியராஜன் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.